இந்திதான் நமது தேசிய மொழி: கிரிக்கெட் வர்ணனையில் பேசிய சஞ்சய் பங்கருக்கு வலுக்கும் எதிர்ப்பு
- இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- இந்த போட்டியின் இந்தி வர்ணனையில் வருண் ஆரோன், சஞ்சய் பங்கர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 306 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் இந்தி வர்ணனையில் வருண் ஆரோன் மற்றும் சஞ்சய் பங்கர் உரையாடி கொண்டிருந்தனர். அப்போது வாஷிங்டன் சுந்தர் பவுலிங் செய்த போது பவுலர் வாஷிங்டன் சுந்தரிடம் கீப்பர் கே.எல்.ராகுல் தமிழில் உரையாடலாமே என வருண் ஆரோன் கூறினார்.
அதற்கு மற்றொரு வர்ணனையாளரான சஞ்சய் பங்கர், தென்னிந்தியர்கள் தங்கள் மாநில மொழிகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இந்திதான் மிகவும் முக்கியமானது. அதுதான் நமது தேசிய மொழி என கருத்தை தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.