பும்ரா இல்லை: கில் உள்பட மற்றொரு வீரருக்கும் கேப்டனாக அனுபவம் உள்ளது- ரவி சாஸ்திரி
- ஐபிஎல் தொடரின் மூலம் அவர்களுக்கு கேப்டனாக அனுபவம் உள்ளது.
- அவர்கள் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அனுபவம் வாய்ந்தவர் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நீங்கள் யாரையேனும் கேப்டன் பதவிக்காக தயார்படுத்த விரும்பினால், நிச்சயம் அது சுப்மன் கில் என்று தான் நான் கூறுவேன். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. அவர் தற்போது 25, 26 வயது தான் ஆகிறது. அதனால் அவருக்கு தேவையான நேரம் உள்ளது. மேலும் அவருடன் ரிஷப் பண்டும் உள்ளார்.
அவர்களுக்கு கேப்டன்களாக அனுபவம் உள்ளது. இப்போது அவர்கள் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சுப்மனின் சிறிய அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிகிறது. மேலும் அவர் மிகவும் அமைதியானவர். அவருக்கு எல்லா குணங்களும் உள்ளன.
ஆனால் அனைவரும் அவர் வெளிநாடுகளில் ரன்களைச் சேர்க்கவில்லை என்று கூறுவது எனக்கு தெரியும். மேலும் ஒவ்வொரு முறையும் இந்த விமர்சனம் எழுந்து வருகிறது.
சில நேரங்களில் நான் அவர்களிடம், நீங்கள் வெளிநாட்டில் எவ்வளவு ரன்கள் குவித்தீரிகள் என்ற கேள்வியை கேட்பேன். அதனால் வெளிநாடு, வெளிநாடு என்று கூறாமல் அவரை விளையாட அனுமதிக்க வேண்டும். மேலும், இந்த சுற்றுப்பயணங்களில் ஒன்றில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என்று ரவி சாஸ்திரி கூறினார்.