ஐ.பி.எல்.(IPL)
null

மும்பைக்கு எதிராக 200+ ரன் இலக்கை துரத்தி வெற்றி பெற்ற ஒரே அணி - வரலாறு படைத்தது பஞ்சாப்

Published On 2025-06-02 06:43 IST   |   Update On 2025-06-02 09:06:00 IST
  • மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்கள் அடித்த 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
  • மும்பை அணியின் இந்த மகத்தான சாதனைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 200+ ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்தது.

ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்கள் அடித்த 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். அண்மையில் முடிந்த எலிமினேட்டர் போட்டியில் கூட முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 200+ ரன்கள் அடித்து வெற்றி பெற்றிருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த மகத்தான சாதனைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மேலும், ஐபிஎல் பிளேஆப் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கும் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் நாக் அவுட் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு:

204 - PBKS vs MI, அகமதாபாத், 2025*

200 - KKR vs PBKS, பெங்களூரு, 2014

191 - KKR vs CSK, சென்னை, 2012

189 - GT vs RR, கொல்கத்தா, 2022

179 - CSK vs SRH, மும்பை, 2018

Tags:    

Similar News