எங்கள் வீரர்களின் துணிச்சலான அணுகுமுறை பாராட்டும் வகையில் இருந்தது: ஷ்ரேயாஸ் அய்யர்
- முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேசியதாவது:
முந்தைய நாள் பயிற்சியின் போது கைவிரலில் பந்து தாக்கியதால் வலி இருந்தது. காயத்தின் தன்மை குறித்து தெளிவாக தெரியவில்லை. அதனை பரிசோதனை செய்யவேண்டும்.
பீல்டிங் செய்ய களம் இறங்காததால் வெளியில் இருந்தபடி வீரர்களுக்கு தகவல்களை பரிமாறினேன். எதிரணி சிறப்பாக ஆடும் போது நமது வீரர்களுக்கு தளர்வு ஏற்படும். அதனை தவிர்க்கவே வீரர்களுடன் தொடர்ந்து பேசினேன். எங்கள் அணி வீரர்களின் துணிச்சலான அணுகுமுறை பாராட்டும் வகையில் இருந்தது.
ஹர்பிரீத் பிரார் வலைபயிற்சியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் அருமையாக செயல்பட்டார். அவரது மனநிலை அபாரமாக இருக்கிறது.
சூழ்நிலை எப்படி இருந்தாலும் வெற்றி பெறவேண்டும் என்ற மனநிலையை நாங்கள் ஒருங்கிணைந்து வெளிக்காட்டி இருக்கிறோம். இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சை அடித்து ஆடுவது கடினமாக இருந்தது. எனவே பெரும்பாலான ரன்களை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக எடுத்தோம். எந்தச் சூழ்நிலையிலும் ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக மாற்ற முடியும் என தெரிவித்தார்.