null
125 சதவீதம் பிரெண்டன் மெக்கல்லம் தான் பயிற்சியாளராக தொடர வேண்டும்- ஹாரி புரூக் நெகிழ்ச்சி
- அவர்தான் நான் இதுவரை சந்தித்த பயிற்சியாளர்களிலேயே சிறந்தவர்.
- அணியில் உள்ள அனைவரும் அவரை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம். இவர் டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து ஆகிய அனைத்து வடிவங்களுக்கும் பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார்.
தொடக்கத்தில் டெஸ்ட் அணிக்கு மட்டும் பயிற்சியாளராக இருந்த இவர், ஜனவரி 2025 முதல் வெள்ளைப்பந்து அணிகளுக்கும் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.
ஆஷஸ் தோல்வியால் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவரை நீக்க ஆலோசனை நடந்து வந்ததாக தகவல் வெளியாகியது. அதனை தொடர்ந்து டி20 உலகக்கோப்பை தோல்வியால் மீண்டும் இது குறித்து கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
என்னதான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆய்வு நடத்தி வந்தாலும், மெக்கல்லம் மற்றும் நிர்வாக இயக்குனர் ராப் கீ ஆகியோரைத் தொடர்ந்து பதவியில் நீட்டிக்க வைக்கவே வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி, மெக்கல்லம் 2027-ம் ஆண்டு இறுதி வரை பதவியில் நீடிப்பார்.
டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவிடம் இங்கிலாந்து தோல்வியடைந்த போதிலும், மெக்கல்லம் தனது பதவியில் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அதில், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நான் தொடர விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் சில அருமையான விஷயங்களைச் சாதித்துள்ளோம், ஆனால் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என கூறினார்.
இந்நிலையில் 125% பிரெண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புருக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அவர்தான் நான் இதுவரை சந்தித்த பயிற்சியாளர்களிலேயே சிறந்தவர். டிரஸ்ஸிங் ரூமில் அவருக்கு என்று ஒரு தனி 'அவுரா' (Aura) இருக்கிறது. அணியில் உள்ள அனைவரும் அவரை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள்.
125% நாங்கள் பிரெண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். அவர் எனக்குக் கிடைத்த சிறந்த பயிற்சியாளர் என ஹாரி புரூக் கூறினார்.