இம்ரான் கானுக்கு ஆதரவாக பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கடிதம்
- இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
- இம்ரான் கான் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் இம்ரான் கான் தனது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வையை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இம்ரான் கான் உடல்நிலை குறித்து அறிந்து வர, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற உதவியாளர், சிறையில் இம்ரான் கானைச் சந்தித்த பிறகு இது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 15 சதவீதப் பார்வை மட்டுமே இருப்பதாகவும், வலது கண் நரம்பில் அடைப்பு காரணமாக இது ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றும் 2025 அக்டோபர் வரை அவரது பார்வை சீராக இருந்ததாகவும், கடந்த சில மாதங்களாகப் பார்வை மங்கத் தொடங்கியும் சிறை அதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளாமல் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததே இந்தப் பாதிப்பிற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது அவரது உடல்நிலையைப் பெரிதும் பாதித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வு, வரும் பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து இம்ரான் கானுக்கு முழுமையான பரிசோதனைகளை நடத்த வேண்டும். அவர் தனது குடும்ப மருத்துவரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரெக் சேப்பல் உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த 14 புகழ்பெற்ற கேப்டன்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அக்கடித்தில், "முன்னாள் கேப்டன்களான நாங்கள், பாகிஸ்தானின் புகழ்பெற்ற முன்னாள் கேப்டனும் உலக கிரிக்கெட்டின் புகழ்பெற்ற நபருமான இம்ரான் கானின் சிகிச்சை மற்றும் சிறைவாச நிலைமைகள் குறித்து ஆழ்ந்த கவலையுடன் எழுதுகிறோம். இம்ரான் கானின் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்று பாகிஸ்தான் அரசாங்கத்தை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1992 உலகக் கோப்பை வென்ற பாகிஸ்தானின் கேப்டன் இம்ரான் கானுக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடிதம் எழுதியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.