கிரிக்கெட் (Cricket)

இந்தியாவிற்காக விளையாடாதவர் இன்று உலக கோப்பையை வென்றார்! - யார் இந்த அமோல் முஜும்தார்?

Published On 2025-11-03 11:24 IST   |   Update On 2025-11-03 11:24:00 IST
  • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
  • இந்திய வீராங்கனைகள் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் வென்ற நிலையில், இந்திய வீராங்கனைகள் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

இதனையடுத்து இணையத்தில் அமோல் முஜும்தாரின் புகைப்படங்கள் வைரலாகின. யார் இந்த அமோல் முஜும்தார் என்ற பலரும் இணையத்தில் அவரை தேடி வருகின்றனர்.

யார் இந்த அமோல் முஜும்தார்?

* அமோல் முஜும்தார் 1974 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.

* அமோல் முஜும்தார் தான் அறிமுகமான முதல் ரஞ்சி போட்டியிலேயே 260 ரன்கள் குவித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அந்த காலத்தில் உலக அளவில் அறிமுக போட்டியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

* அமோல் முஜும்தார் 171 முதல்தர போட்டிகளில் விளையாடி 30 சதங்கள், 60 அரைசதங்களுடன் 11167 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 48.13 ஆகும். 113 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் 3286 ரன்கள் சேர்த்துள்ளார்.

* உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் இந்திய ஆடவர் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் டிராவிட், சச்சின், வி.வி.எக்ஸ். லட்சுமண் மற்றும் கங்குலி ஆகியோர் இருந்த காலத்தில் அவர் விளையாடியதே அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம்.

* அமோல் முஜும்தார் 2014 ஆம் ஆண்டில், முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் பயிற்சியாளர் என்ற புதிய அவதாரம் எடுத்தார்

* தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஐ.பி.எல். இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளாகவும் பணியாற்றினார்.

* 2023 ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர்கா பொறுப்பேற்றார்.

* கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக, அவர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளார்.

Tags:    

Similar News