பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்கள் சந்திப்பு
புதுடெல்லி:
32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடந்தது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 126 வீரர்-வீராங்கனைகள் 18 விளையாட்டுகளில் பங்கேற்றனர். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அதிகபட்சமாக 7 பதக்கங்களை (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்று சாதனை படைத்தது.
ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை அவர் படைத்தார்.
பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீரர் ரவிகுமார் தகியா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் 2 பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். அவர் ரியோ டி ஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக்கிலும் (2016) வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.
ஆக்கி போட்டியில் வெண்கல பதக்கம் கிடைத்தது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஆக்கியில் இந்தியா பதக்கம் பெற்று புதிய சாதனை படைத்தது. இதேபோல மகளிர் ஆக்கி அணியும் முதல்முறையாக அரைஇறுதி வரை தகுதி பெற்று 4-வது இடத்தை பிடித்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்து நாடு திரும்பிய இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தேனீர் விருந்து கொடுத்து பாராட்டினார்.
சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களையும், அதில் பங்கேற்றவர்களையும் பாராட்டினார்.
இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை சந்தித்தனர்.
தனது இல்லத்தில் சந்தித்த அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காலை உணவு வழங்கினார். பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரர்- வீராங்கனைகளையும் அவர் தனித்தனியாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்