செய்திகள்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் - இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ள நிலையில் மொத்த பதக்க எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 53 நாடுகளை சேர்ந்த 224 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
நேற்றைய 9-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 13 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 27 பதக்கம் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
10-வது நாளான இன்று காலை ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் அணிகள் பிரிவில் தங்க பதக்கத்துக்கான போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் விஜய்வீர்சித்து, குர்பிரீத்சிங், ஆதர்ஷ்சிங், அமெரிக்காவின் கீத் சாண்டர்சன், ஷாக் ஹாப்சன் லெவரெட், ஹென்றி டர்னர் ஆகியோரை கொண்ட அணிகள் மோதின. இதில் அமெரிக்கா 10-2 என்ற புள்ளி கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இதனால் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது.