செய்திகள்
அதானிக்கு பில்லியன் டாலர் கடன் கொடுக்காதே: பதாகையுடன் போட்டியை நிறுத்திய ரசிகர்கள்
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது இரண்டு ரசிகர்கள் பதாதைகளுடன் மைதானத்தில் வந்து போட்டியை சற்று நேரம் நிறுத்தினர்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் திடீரென இரண்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் பதாகையுடன் நுழைந்தனர். அவர்கள் பதாகையை தூக்கிப் பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு வீரர்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். சுமார் 30 வினாடிகள் போட்டி பாதிக்கப்பட்டது. அதன்பின் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.
இருவரும் கையில் ‘No $1B Adani Loan’ என்ற பதாகையுடன் மைதானத்திற்குள் நுழைந்தனர். அதானி குழுமம் சுரங்கத் தொழிலுக்கு குயின்ஸ்லாந்தில் அனுமதி பெற்றது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின்போது சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் அதானியை எதிர்த்து Stop Adani group சமீபத்தில் மீடியாவை சந்தித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஒரு பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அதானிக்கு கடன் வழங்க ஒப்புதல் வழங்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அவருக்கு கடன் வழங்கக் கூடாது என குரல் கொடுத்தது.
தற்போது அந்தக்குழுவை சேர்ந்தவர்கள் மைதானத்திற்குள் நுழைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மேலும், அணிந்திருந்த டி-சர்ட்டில் ஸ்டாப் அதானி, ஸ்டாப் கோல், ஸ்டாப் அதான், டேக் ஆக்சன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.