விராட் கோலி தனது இஷ்டப்படி செயல்படுகிறார் - பிஷன்சிங் பெடி குற்றச்சாட்டு
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) வீராட் கோலி கேப்டனாக திகழ்ந்துள்ளார்.
ரன்மெஷின் சிங் என்று அழைக்கப்படும் அவர் பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார்.
விராட் கோலி தனது முழு அதிகாரத்தையும் தனிநபர் ஆட்சி போல் செயல்படுத்துவது தவறு என்ற பரவலான எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது.
பயிற்சியாளர் விவகாரத்தில் அவர் தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தியது உதாரணத்துக்கு ஒன்றாகும்.
இந்த நிலையில் விராட் கோலியை முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம் பவான்களில் ஒருவருமான பிஷன்சிங் பெடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒரு நபர் (விராட்கோலி) தனது இஷ்டத்துக்கு ஏற்றப்படியும், விருப்பப்படியும் செயல்படுகிறார். நாமும் அவரை விட்டுக் கொண்டு இருக்கிறோம். வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
அணில் கும்ப்ளே விவகாரத்தில் அணில் என்ன கூறி இருக்க போகிறார். ஆனால் அவர் பெருந்தன்மையாக அப்படியே அதனை விட்டு விட்டார்.
தற்போதுள்ள இந்திய அணி நன்றாக இருக்கிறது. ஆனால் நமது அணி ஒருநபரால் தான் ஆனது. அனைத்தும் கோலிதான்.
அவர் மீது அதிகமான கவனம் இருந்தால் எப்படி ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியும். ஒரு கேப்டனாக, ஒரு வீரராக அவர் மீது நாம் கடும் அழுத்தங்களை ஏற்படுத்துகிறோம்.
இவ்வாறு பிஷன்சிங் பெடி கூறினார்.
கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே 2017-ம் ஆண்டு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடதக்கது. #ViratKohli