செய்திகள்

ஷ்ரேயாஸ் அய்யர் சதம் வீண் - ரகானே அணி தியோதர் டிராபியை கைப்பற்றியது

Published On 2018-10-27 13:01 GMT   |   Update On 2018-10-27 13:01 GMT
தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் கேப்டன் ரகானேவின் அபாரமான சதத்தால் இந்தியா ‘சி’ அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. #DeodharTrophy #Rahane #shreyasIyer
தியோதர் டிராபி இறுதிப் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா ‘சி’ - இந்தியா ‘பி’ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா ‘பி’ அணிக்கு எதிராக ரகானே தலைமையிலான இந்தியா ‘சி’ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

ரகானே மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கிஷன் 87 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷுப்மான் கில் 33 பந்தில் 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 18 பந்தில் 39 ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் ரகானே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 156 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 144 ரன்கள் விளாச இந்தியா ‘சி’ 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.

அதன்பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா ‘பி’ களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட், மயங்க் அகர்வால் இறங்கினர்.



மயங்க் அகர்வால் 14 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆடினார். கெய்க்வாட், அய்யர் ஆகியோர் சேர்ந்து 116 ரன்கள் ஜோடி சேர்த்தனர். கெய்க்வாட்60 ரன்னில் வெளியேறினார். 

ஒருபுறம் ஷ்ரேயாஸ் அய்யர் சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 114 பந்துகளில் 8 சிக்சர்கள், 11 பவுண்டரிகளுடன் 148 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் இந்தியா பி அணி 46.1 ஓவரில் 323 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.

இந்தியா சி சார்பில் பப்பு ராய் 3 விக்கெட்டும், நவ்தீப் சைனி, ரஜ்னீஷ் குருபானி,விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சதமடித்த ரகானே ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

இதையடுத்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சி அணி வெற்றி பெற்றதுடன், தியோதர் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
#DeodharTrophy #Rahane #shreyasIyer
Tags:    

Similar News