செய்திகள்

டோனியின் எதிர்காலம் முடிந்து விடவில்லை- தேர்வு குழு தலைவர் விளக்கம்

Published On 2018-10-27 05:50 GMT   |   Update On 2018-10-27 05:50 GMT
டோனி 20 ஓவர் அணியில் இருந்து நீக்கம் செய்யப்படவில்லை ஓய்வுதான் கொடுக்கப்பட்டுள்ளது என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். #INDvWI #MSDhoni #MSKPrasad
புனே:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது இந்த நீக்கம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணி 104 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறது. இதில் 93 ஆட்டத்தில் டோனி ஆடி இருக்கிறார். 20 ஓவரில் தனித்திறமையை வெளிப்படுத்தும் அவரது நீக்கம் ஏமாற்றம் அளிக்கிறது.

இந்த நிலையில் டோனி 20 ஓவர் அணியில் இருந்து நீக்கம் செய்யப்படவில்லை. அவருக்கு ஓய்வுதான் (6 ஆட்டம்) கொடுக்கப்பட்டுள்ளது என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய அணி அடுத்து விளையாட இருக்கும் 6 இருபது ஓவர் போட்டியில் டோனி இடம் பெறவில்லை. 2-வது விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்ப இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதனால் டோனிக்கு ஓய்வு தான் கொடுக்கப்பட்டுள்ளது.



20 ஓவர் போட்டியில் டோனியின் எதிர்காலம் முடிந்து விடவில்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

37 வயதான டோனி 20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்து பெருமை சேர்த்தவர். ஸ்டம்பிங் செய்வதில் வல்லவரான அவர் 93 ஆட்டத்தில் 1487 ரன்கள் எடுத்துள்ளார். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் அவரது ஸ்டிரைக் ரேட் 127.07 ஆகும்.

சேப்பாக்கத்தில் நவம்பர் 11-ந்தேதி நடைபெறும் 20 ஓவர் போட்டியில் ஆடாமல் இருப்பது தமிழக ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கும். #INDvWI #MSDhoni #MSKPrasad
Tags:    

Similar News