புதுச்சேரி

மாணவிக்கு எதிரான செயல்பாட்டுக்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்- வானதி சீனிவாசன் ஆவேசம்

Published On 2025-01-04 10:49 IST   |   Update On 2025-01-04 10:49:00 IST
  • அமைச்சர் ரகுபதி இந்த விஷயத்தில் புரிந்து பேசுகிறாரா என தெரியவில்லை.
  • மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில பா.ஜ.க. நிர்வாக அமைப்பு தேர்தல் சம்பந்தமாக புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அகில இந்திய மகளிர் அணி தலைவியும் தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக அரசு இருக்கவேண்டும். உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்ததன் மூலம் நியாயமான விசாரணை நடக்கவில்லை என நிருபணமாகிறது.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த விஷயத்தில் புரிந்து பேசுகிறாரா என தெரியவில்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எங்கு பெண்களுக்கு எதிரான கொடுமை நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது.

ஆனால் தமிழகத்தில் அதுபோல் இல்லை. எப்.ஐ.ஆர். வெளியே வந்துள்ளது. நாட்டில் எங்கு பெண்களுக்கு பாதிப்பு நிகழ்ந்தாலும் பா.ஜ.க. குரல் கொடுக்கிறது. சட்டரீதியான பாதுகாப்பு தருகிறோம். பா.ஜ.க. ஆட்சிபுரியும் மாநிலத்தில் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள்.

தமிழக அரசு பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிரான செயல்பாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

பெண்கள் தொடர்பான வழக்குகளில் அரசும், சமூகமும், மீடியாவும் பொறுப்புணர்வோடு அணுக வேண்டும். சமூக வலைத்தளங்களில் பெண்களை யார் விமர்சித்தாலும் தவறுதான்.

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை வழக்கமான நடவடிக்கைதான். அவர்கள் ஆதாரத்தை வைத்துதான் சோதனையிடுவார்கள்.

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

Tags:    

Similar News