மம்தா பானர்ஜி பேச்சுக்கு எதிர்ப்பு: மேற்கு வங்க சட்டசபையில் பா.ஜ.க. அமளி
- மம்தா பானர்ஜி பேசுகையில், பா.ஜ.க. ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி என தெரிவித்தார்.
- எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கொல்கத்தா:
மகாராஷ்டிரா, அசாம், ஒடிசா, டெல்லி, குஜராத் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் எனக்கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
மேற்கு வங்க சட்டசபையில் இந்த விவகாரம் தொடா்பான சிறப்பு தீா்மானம் ஆளும் கட்சி சார்பில் இன்று முன்மொழியப்பட்டது.
விவாதம் தொடங்கியவுடன் மேற்கு வங்க மந்திரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசுகையில், பா.ஜ.க. ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி. மிகப்பெரிய கொள்ளையர்களின் கட்சி. மத்தியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என தெரிவித்தார்.
மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு எதிராக பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாஜக கொறடா சங்கர் கோஷ் இன்று ஒருநாள் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சபையில் இருந்து அவர் வெளியேற மறுத்ததால், அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.