இந்தியா

நாட்டில் அமைதி முக்கியம், ஆனால் பாதுகாப்பில் சமரசம் இல்லை: பிரதமர் மோடி

Published On 2025-11-25 20:45 IST   |   Update On 2025-11-25 20:45:00 IST
  • அயோத்தி ராமர் கோவிலில் இன்று கொடியேற்றப்பட்டது.
  • குருஷேத்திர மண்ணில் பாஞ்சஜன்ய நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது.

சண்டிகர்:

சீக்கிய மத குருவான தேஜ் பகதூரின் சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடும் விழா அரியானா மாநிலத்தின் குருஷேத்திரத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

இன்று இந்தியாவின் பாரம்பரியத்தின் அற்புதமான நாள். காலை அயோத்தியில் இருந்தேன். மாலை, பகவத்கீதை நகரமான குருஷேத்திரத்தில் இருக்கிறேன்.

ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 350வது தியாக நாளில் நாம் அனைவரும் இங்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அந்த வேண்டுதல் நிறைவேறியுள்ளது. அன்றே ராமர் கோவிலுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது.

இன்று அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்றப்பட்ட நிலையில், சீக்கிய சமூகத்தினரிடம் இருந்து ஆசிகளை பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

குருஷேத்திர மண்ணில் இன்று பாஞ்சஜன்ய நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது.

குரு தேஜ் பகதூர் உண்மை, நீதி மற்றும் நம்பிக்கையைப் பாதுகாப்பதை தனது மதமாக கருதினார். அதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

நாம் அமைதியையே விரும்புகிறோம். பாதுகாப்பில் சமரசத்தை அல்ல. இதற்கு சிறந்த உதாரணம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என தெரிவித்தார்.

Tags:    

Similar News