இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுக்கே சாதகம் - ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட்
- இதில் உள்ள சமமின்மை வெளிப்படையாகத் தெரிகிறது.
- அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான சுங்க வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.
இந்தியா - அமெரிக்கா இடையேயே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியா மற்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இது ஒரு இடைக்கால ஒப்பந்தம் கூட கிடையாது. இது ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான Framework மட்டுமே.
அறிக்கையின் 2-வது பத்தி மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த வரைவு ஒப்பந்தத்தை மிகவும் தெளிவற்றதாக ஆக்கியுள்ளன.
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்த வரைவு ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமாகச் சாய்ந்துள்ளது மற்றும் இதில் உள்ள சமமின்மை வெளிப்படையாகத் தெரிகிறது.
உதாரணமாக, அனைத்து அமெரிக்கத் தொழில் துறைப் பொருட்கள் மற்றும் பரந்த அளவிலான உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான சுங்க வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.
ஆனால், இந்தியாவிலிருந்து வரும் பொருட்கள் மீது அமெரிக்கா 18 சதவீத சுங்க வரியை விதிக்கும். இந்தப் பொருட்களில் ஜவுளி, தோல் பொருட்கள், கரிம வேதிப்பொருட்கள் போன்றவை அடங்கும். இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே அமெரிக்கா இந்தச் சுங்க வரியை நீக்கும்.
குறிப்பிட்ட சில விமானங்கள் மற்றும் விமானப் பாகங்களைத் தவிர, எஃகு , தாமிரம் மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் மீதான அமெரிக்கச் சுங்க வரிகள் தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிகிறது.
நிலைமை இப்படி இருக்க, இந்த இடைக்கால ஒப்பந்தத்திற்கான Framework எப்படிக் கொண்டாட்டத்திற்குரிய விஷயமாக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.