இந்தியா

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? - பட்டியலிட்ட ஜெய்ராம் ரமேஷ்

Published On 2026-02-07 22:10 IST   |   Update On 2026-02-07 22:10:00 IST
  • ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால் மீண்டும் 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. .
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பின்வாசல் வழியாக நாட்டிற்குள் அனுமதிக்கும் செயலாகும்.

இந்தியா - அமெரிக்கா இடையேயே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஒப்பந்தப்படி, அமெரிக்காவிலிருந்து இந்தியா செய்யும் வருடாந்திர இறக்குமதிகள் மூன்று மடங்காக உயர்ந்து, நமது நீண்டகால வர்த்தக உபரியை இல்லாமல் ஆக்கிவிடும்.

அமெரிக்காவுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற சேவைகளின் ஏற்றுமதி விஷயத்தில் நிச்சயமற்ற நிலை தொடரும். அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு முன்பை விட அதிக வரிகள் விதிக்கப்படும்.

இந்திய விவசாயிகளின் கண்ணோட்டத்தில் இந்த இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை வர்த்தக அமைச்சர் தற்காத்துப் பேசுவது, மிகத் தந்திரமாக உண்மையை மறைக்கும் செயலாகும்.

முதலாவதாக, இந்த அறிக்கையில் "கூடுதல் பொருட்கள்" என்று ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவை எவை என்று விளக்கப்படவில்லை.இது மிகவும் வெளிப்படைத்தன்மை இன்றி, ஏதோ ஒன்று மறைக்கப்படுவதையே இது காட்டுகிறது.

இரண்டாவதாக,மெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் வர்த்தகத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் தடைகளை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (GM crops) மற்றும் பால் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது என்று இதற்குப் பொருள் கொள்ளாமல் வேறு எப்படிப் புரிந்துகொள்வது?

மூன்றாவதாக, அமெரிக்காவிலிருந்து மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் DDGS (Distillers Dried Grains with Solubles) இந்தியாவிற்குப் பயனளிக்கும் என்று பெரிதாகப் பேசப்படுகிறது.

ஆனால், இந்த DDGS என்பது மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து தயாரிக்கப்படுவது. இது மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பின்வாசல் வழியாக நாட்டிற்குள் அனுமதிக்கும் செயலாகும்.

நான்காவதாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சோயாபீன் விவசாயிகள், இந்த DDGS மற்றும் சோயாபீன் எண்ணெய் இறக்குமதியால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்." என்று தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News