இந்தியா

உயிருக்கு போராடிய முஸ்லீம் இளைஞரை தேசிய கீதம் பாட கட்டாயப்படுத்திய டெல்லி போலீசார் மீது நீதிமன்றம் நடவடிக்கை

Published On 2026-02-07 15:21 IST   |   Update On 2026-02-07 15:22:00 IST
  • போலீசார் லத்திகளால் அந்த இளைஞர்களைத் தாக்கி, ரத்தம் வழியும் நிலையிலும் தேசிய கீதம் மற்றும் 'வந்தே மாதரம்' பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது பதிவாகியிருந்தது.
  • உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் ஃபைசான் உயிரிழந்தார்.

2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறியது. கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கலவரத்தின்போது படுகாயமடைந்த ஃபைசான் என்ற 23 வயது இஸ்லாமிய சமூக இளைஞர் உட்பட நான்கு பேரை சாலையில் கிடத்தி வைத்து தேசிய கீதம் பாடச் சொல்லி வற்புறுத்திய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில், போலீசார் லத்திகளால் அந்த இளைஞர்களைத் தாக்கி, ரத்தம் வழியும் நிலையிலும் தேசிய கீதம் மற்றும் 'வந்தே மாதரம்' பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது பதிவாகியிருந்தது.

இதன்பின் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் ஃபைசான் உயிரிழந்தார். 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஃபைசான் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் எனக் கருதப்படும் 7 காவலர்கள்  நேரில் ஆஜராமாகசம்மன் அனுப்பியுள்ளது.

அவர்கள் மீது கடத்தல், முறையற்ற சிறைபிடிப்பு மற்றும் கொலைக் குற்றம் தொடர்பான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் டெல்லி போலீஸாரின் குற்றப்பிரிவு தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம், அந்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்கான ஒரு முக்கிய நகர்வாக இந்த நீதிமன்ற உத்தரவு பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News