இந்தியா

VIDEO: உணவுக்கு ரூ.20 கூடுதல் வசூல்.. கேள்வி கேட்ட பயணியை பெல்ட்-ஆல் விளாசிய ரெயில்வே கேட்டரிங் ஊழியர்கள்?

Published On 2025-11-06 15:08 IST   |   Update On 2025-11-06 15:13:00 IST
  • ஏன் அதிக விலை வசூலிக்கப்படுகிறது என்று ஊழியர்களிடம் கேட்டார்.
  • பயணிகள் தங்கள் தொலைபேசிகளில் தாக்குதலை படம் பிடித்தனர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிஹால் (25) என்ற இளைஞர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது குடும்பத்தினருடன் உத்தரப் பிரதேசத்தின் கத்ராவில் இருந்து மத்திய பிரதேசத்தின் பினா நோக்கி அந்தமான் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றுகொண்டிருந்தார்.

பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் ரெயிலில் சைவ உணவுகளை ஆர்டர் செய்தார். அதன் விலை ரூ.110 ஆக இருந்த நிலையில், கேட்டரிங் ஊழியர்கள் அவரிடம் ரூ.130 வசூலித்தனர். இதற்கு நிஹால் எதிர்ப்பு தெரிவித்து, ஏன் அதிக விலை வசூலிக்கப்படுகிறது? என்று ஊழியர்களிடம் கேட்டார்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கேட்டரிங் ஊழியர்கள் நிஹாலை தடிகளாலும், பெல்ட்களாலும் கண்மூடித்தனமாக அடித்தனர்.

சக பயணிகள் அவர்களைத் தடுக்க முயன்றாலும், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தாக்குதலைத் தொடர்ந்தனர். சில பயணிகள் தங்கள் தொலைபேசிகளில் தாக்குதலை படம் பிடித்தனர்.

ரெயில் ஜான்சி ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியது. இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

ரெயில் பினா நிலையத்தை அடைந்தவுடன் நிஹால் ரெயில்வே காவலரளிடம் புகார் அளிக்க முயன்றார். ஆனால் அவர்கள் இந்த விவகாரம் தங்கள் எல்லைக்குள் நடக்கவில்லை என கூறி புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இது பழைய வீடியோ என்றும் இதுபோன்ற எந்த சம்பவமும் பதிவாகவில்லை எனவும் வடக்கு ரெயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News