இந்தியா

மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் ஓய்வூதிய வரி விலக்கு ரத்து: மத்திய அரசு முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Published On 2026-02-04 02:03 IST   |   Update On 2026-02-04 02:03:00 IST
  • ராணுவத்தில் தங்களது முழு பணிக்காலத்தையும் முடித்துவிட்டு ஓய்வுபெற்ற வீரர்கள், பணி காலத்தில் மாற்றுத்திறனாளி ஆகியிருந்தாலும் வரி விலக்கு கிடையாது.
  • முதலில் அக்னிவீர் திட்டம் நாட்டின் பாதுகாப்பைச் சிதைத்தது, இப்போது மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்தின் மீதான இந்தத் தாக்குதல் ராணுவ வீரர்களின் மன உறுதியைக் குறைக்கும்.

2026-27 பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான வருமான வரி விலக்கை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இதற்கு நாடு முழுவதும் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பட்ஜெட் அறிவிப்பின்படி, உடல் குறைபாடு காரணமாக ராணுவ சேவையிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு மட்டுமே இனி வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

ராணுவத்தில் தங்களது முழு பணிக்காலத்தையும் முடித்துவிட்டு ஓய்வுபெற்ற வீரர்கள், பணி காலத்தில் மாற்றுத்திறனாளி ஆகியிருந்தாலும், அவர்களுக்கு இனி அந்த ஓய்வூதியத்திற்கு வரி விலக்கு கிடையாது.

பெரும்பாலான மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களது பணிக்காலத்தை முடித்த பிறகே ஓய்வு பெறுகிறார்கள். எனவே அரசின் இந்த முடிவால் பலர் பாதிக்கப்படுவர்.

பணியின் போது காயமடைந்து அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி ஆகும் வீரர்களுக்கு, நிர்வாகப் பணிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் ஓய்வு பெறும்போது வரி விலக்குடன் கூடிய கூடுதல் ஓய்வூதியம் மற்றும் மருத்துவச் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.

தற்போது அந்த வரி விலக்குச் சலுகையை அரசு பறிக்கப்பட்டுள்ளது நாட்டின் பாதுகாப்பிற்காகப் போராடி ஊனமுற்ற வீரர்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருப்பதாகப் முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.

முன்னாள் மேஜர் ஜெனரல் ஷைல் ஜா இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில், "முதலில் அக்னிவீர் திட்டம் நாட்டின் பாதுகாப்பைச் சிதைத்தது, இப்போது மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்தின் மீதான இந்தத் தாக்குதல் ராணுவ வீரர்களின் மன உறுதியைக் குறைக்கும்" என்று விமர்சித்துள்ளார். 

Tags:    

Similar News