இந்தியா

உ.பி. இளைஞரை 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்ததா? - வெளியான அதிர்ச்சி தகவல்

Published On 2024-07-18 11:26 IST   |   Update On 2024-07-18 13:16:00 IST
  • தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன.
  • 9 வது முறை பாம்பு தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது.

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் வ்யாவிகாஸ் தூபே. கடந்த 40 நாட்களில் மட்டும் 7 முறை தன்னை விஷப்பாம்புகள் கடித்துள்ளதாக அவர் தெரிவித்தது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார்.

இதன்பிறகு ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தன்னை பாம்பு கடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது, 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் அவர் தெரிவித்தார்.

சனி ஞாயிற்றில் மட்டுமே அவரை எப்படி பாம்பு கடிக்கிறது என்று இந்த விவாகரத்தில் மருத்துவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இதனையடுத்து விகாஸின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக பத்தேபூர் ஆட்சியர் இந்துமதியின் உத்தரவின்பேரில் மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், விகாஸ் தூபேவை இதுவரை ஒரு முறை மட்டுமே பாம்பு கடித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறை பாம்பு கடித்ததில் பயம் ஏற்பட்டு (Snake Phobia) தன்னை அடிக்கடி பாம்பு கடித்ததாக எண்ணி விகாஸ் தூபே அச்சப்பட்டுள்ளார்.  ஆகவே அவருக்கு மனநல சிகிச்சை தேவை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News