இந்தியா

உண்மையான சிவசேனா யார் என்பது தேர்தல் வந்தால் தெரியும்: உத்தவ் தாக்கரே

Published On 2022-07-27 03:05 GMT   |   Update On 2022-07-27 03:05 GMT
  • அதிருப்தி அணியினர் எல்லோரும் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல.
  • மகாவிகாஸ் கூட்டணியில் ஒருவரை, ஒருவர் மதித்தோம்.

மும்பை :

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை அடுத்து, முதல்-மந்திரி பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் முதல் முறையாக தனது கட்சி பத்திரிகையான 'சாம்னா'வுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அதிருப்தி அணியினர் மரத்தில் அழுகிய இலைகள். அவை கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும். இது மரத்திற்கு நல்லது. மரத்தில் புதிய இலைகள் வளரும்.

அதிருப்தி அணியினர் அவர்கள் உண்மையான சிவசேனா என கூறுகிறார்கள். இதற்கான பதில் தேர்தல் வந்தால் தெரிந்துவிடும். மக்கள் ஒன்று எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். அல்லது அவர்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கு யார் காரணம் என கேட்கிறார்கள். சில சிவசேனா தொண்டர்கள், தலைவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துவிட்டேன் என தோன்றுகிறது. அவர்களை நீண்ட காலமாக நம்பியது எனது தவறுதான்.

பா.ஜனதா சிவசேனாவை உடைக்க மட்டும் முயற்சி செய்யவில்லை. மற்ற கட்சிகளை சேர்ந்த சிறந்த தலைவர்களையும் தங்கள் அரசியலுக்காக பயன்படுத்த முயற்சி செய்கிறது. காங்கிரஸ் தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேலை பயன்படுத்த முயற்சி செய்தது போல, மறைந்த எனது தந்தை பால்தாக்கரேயையும் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதிருப்தி அணியினர் எல்லோரும் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல. அவர்கள் சிவசேனா தொண்டர்கள் இடையே தான் பகையை ஏற்படுத்துகின்றனர்.

மகாவிகாஸ் கூட்டணி நல்ல முயற்சி. மக்களுக்கு அது தவறான நடவடிக்கை என்றால், அவர்கள் எங்கள் கூட்டணிக்கு எதிராக எழுவார்கள். மகாவிகாஸ் கூட்டணியில் ஒருவரை, ஒருவர் மதித்தோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News