இந்தியா

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வரும் மாநிலத்தில் ஒப்பந்த பணியாளர்களை முறைப்படுத்துவோம்- கெஜ்ரிவால் உறுதி

Published On 2022-09-10 10:29 GMT   |   Update On 2022-09-10 10:29 GMT
  • ஒப்பந்த ஆசிரியர்களை முறைப்படுத்துவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
  • டெல்லியில் உள்ள மருத்துவமனைகளிலும், சுகாதார நிலையங்களிலும் மருத்துவ பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசில் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அவர் மாற்றங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒப்பந்த ஆசிரியர் பணி முறைப்படுத்தியதற்காக அம்மாநில முதல்வர் பகவந்த் மானுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

மாநிலத்தில் அரசு வேலைகள் குறைந்து, ஒப்பந்த ஆசிரியர்களை அதிகளவில் நியமித்து வந்த வேளையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் 8,736 ஆசிரியர்களின் பணியை முறைப்படுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும்.

டெல்லியில் ஒப்பந்தம் மற்றும் வழக்கமான ஆசிரியர்களின் முயற்சியால் கல்விப் புரட்சி ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் ஒப்பந்த ஆசிரியர்களை முறைப்படுத்துவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

டெல்லியில் உள்ள மருத்துவமனைகளிலும், சுகாதார நிலையங்களிலும் மருத்துவ பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், அனைத்து மாநில அரசுகளும் ஒப்பந்த பணியாளர்களை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இதேபோல், ஆம் ஆத்மி அரசு எங்கெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அங்கெல்லாம் ஒப்பந்த பணியாளர்களின் பணி முறைப்படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி சார்பில் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News