காங்கிரசுக்காக உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள்- அசாதுதீன் ஒவைசி
- சீன ஆக்கிரமிப்பை தடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன்.
- நீங்கள் அனைவரும் அரசியல் சக்தியாக வரவில்லை என்றால் இங்கு எதுவும் மாறாது.
மத்தியப் பிரதேசத்தில் விரைவில் மாநகராட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சியினர் (ஏஐஎம்ஐஎம்) சில பகுதிகளில் போட்டியிடுகிறது.
இதையொட்டி, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி நேற்று தனது கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக பறை சாற்றும் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டில் காங்கிரஸ் வீணான சக்தியாக மாறிவிட்டது. அது அதன் இருப்பை இழந்துவிட்டது. அதனால் காங்கிரசுக்காக உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள்.
இந்திய நிலத்தை சீன நாடு ரகசியமாக அத்துமீறி ஆக்கிரமித்து வருவதால், எல்லையில் கவனம் செலுத்தி சீன ஆக்கிரமிப்பை தடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன். இதற்கு யார் காரணம் என்று காங்கிரசையும், பாஜகவையும் நான் கேட்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அரசியல் சக்தியாக வரவில்லை என்றால் இங்கு எதுவும் மாறாது.
இவ்வாறு அவர் பேசினார்.