இந்தியா

ராமர் கோவில் திறப்பு என்பது தேர்தலுக்கான உத்தியாக இருக்கலாம் - சஞ்சய் ராவத் விமர்சனம்

Published On 2023-10-26 05:13 GMT   |   Update On 2023-10-26 07:08 GMT
  • அயோத்தி ராமர் கோவில் 2024, ஜனவரி 22-ம் தேதி அன்று திறக்கப்படுகிறது.
  • ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

மும்பை:

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் 2.7 ஏக்கரில், 57,400 சதுர அடியில் ரூ.2000 கோடி மதிப்பில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி அன்று நண்பகல் 12.30 மணிக்கு அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். கும்பாபிஷேக நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார். இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அமைப்பு அழைப்பிதழை வழங்கியது.

இந்நிலையில், ராமர் கோவிலுக்குச் சென்று பிரதமர் மோடி பூஜை செய்வது என்பது தேர்தலுக்கான தயாரிப்பாக இருக்கலாம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் இவ்வளவு பெரிய நிகழ்வை ஏன் விடப்போகிறார்? பிரதமரை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர் தானே செல்வார்.

ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர்.

சிவசேனா, பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அனைத்து இந்துத்துவ அமைப்புகளும், பல்வேறு கட்சிகளும் இதில் ஈடுபட்டன.

எல்.கே.அத்வானி ரத யாத்திரை நடத்தினார். அதன் விளைவாகவே ராமர் கோவில் கட்டப்படுகிறது.

பிரதமர் மோடி அங்கு சென்று பூஜை செய்வது வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்பாக இருக்கலாம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News