மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பை எதிர்த்து பேரணி.. 20 வருடம் கழித்து கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்
- தேசிய கல்விக் கொள்கையின்படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கியது.
- இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியுள்ளது.
இந்நிலையில் இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளன. இந்த பேரணிக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் ஆதரவு தெரிவித்துள்ளது.
வரும் ஜூலை 5 ஆம் தேதி, கிர்கான் சௌபட்டியில் இருந்து ஆசாத் மைதானம் வரை நடைபெறும் பேரணியில் இருவரும் பங்கேற்பார்கள்.
இதன்மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜும் உத்தவும் இணைகிறார்கள். சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மாநிலத்திற்காக கைகோர்ப்பதாக அண்மையில் சூசகமாக தெரிவித்தனர்.
இந்த சூழலில், இந்த கூட்டு பேரணி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. நகராட்சி தேர்தல்கள் நெருங்கி வருவதால், உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.