null
பழங்குடியினர், சுற்றுச்சூழலுக்கு பேராபத்து.. கிரேட்டர் நிகோபார் திட்டம் குறித்து ராகுல், சோனியா எச்சரிக்கை
- ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
- 32 லட்சம் முதல் 58 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் மரங்கள் வெட்டப்படும்.
மத்திய அரசின் கிரேட் நிக்கோபார் தீவுத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் அந்தமான் நிக்கோபாரில் ஒரு டிரான்ஸ்-ஷிப்மென்ட் சரக்கு துறைமுகம், ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு டவுன்ஷிப் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட உள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குழைக்கும் பேராபத்தான திட்டம் என்று முன்னணி நாளிதழ் ஒன்றில் சோனியா காந்தி விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஷோம்பென் மற்றும் நிக்கோபாரிஸ் போன்ற பழங்குடியினரின் உயிர்வாழ்வு ஆபத்தில் இருக்கும்போது நாட்டு மக்களின் மனசாட்சி அமைதியாக இருக்கக்கூடாது. ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த அநீதிக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.
இந்தத் திட்டத்தை நிர்மாணிப்பதில் மத்திய அரசு அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையத்திடம் ஆலோசிக்காமல், கிரேட் நிக்கோபார் பழங்குடி கவுன்சிலின் முறையீடுகள் புறக்கணித்து திட்டம் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுவது கேலிக்கூத்தாகும்.
அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, இந்த திட்டத்திற்காக 8.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும், ஆனால் சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்த எண்ணிக்கை 32 லட்சம் முதல் 58 லட்சம் வரை இருக்கலாம்.
ஆமைகள் முட்டையிடும் ஒரு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கடலோரப் பகுதியில் துறைமுகம் காட்டப்படுகிறது.
அந்தப் பகுதி பூகம்ப அபாயகரமான மண்டலத்தில் இருக்கும் நிலையில், அங்கு இவ்வளவு பெரிய திட்டத்தைக் மேற்கொள்வது முதலீடு, உள்கட்டமைப்பு, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலை மோசமான ஆபத்தில் ஆழ்த்தும்" என்று எச்சரித்துள்ளார்.
பழங்குடியினர் உரிமைகளை பறித்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பணியில் மத்திய அரசு ஈடுபடுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.