இந்தியா

ராகுல் காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கு - 12 மணி நேர விசாரணை முடிந்து வெளியேறினார் ராகுல் காந்தி

Published On 2022-06-21 19:58 GMT   |   Update On 2022-06-21 19:58 GMT
  • நேஷனல் ஹெரால்டு வழக்கில் 5வது நாளாக ராகுல் காந்தியிடம் நேற்று விசாரணை நடைபெற்றது.
  • ராகுல் காந்தியிடம் நேற்று 12 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது.

இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பொருளாளர் பவன்குமார் பன்சால், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர். இந்த வழக்கில் கடந்த 13-ம் தேதி ராகுலும், வரும் 23-ம் தேதி சோனியா காந்தியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் அப்துல் கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஏற்கனவே 4 முறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 40 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.

ராகுலிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

நேற்று 5-வது நாளாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரானார் ராகுல் காந்தி. முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவிலும் நீடித்தது. பின்னர் இரவு 9 மணிக்கு இரவு உணவுக்காக ராகுல் காந்தி வீட்டுக்குச் சென்றார். அதன்பின்னர் மீண்டும் அமலாக்கப் பிரிவு அலுவலகம் சென்றார் ராகுல் காந்தி. இரவிலும் துருவி துருவி ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்தனர்.

இந்நிலையில், விசாரணைக்கு பின் டெல்லி அமலாக்கத்துறை இயக்குனரகம் அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 12 மணி நேர விசாரணை முடிந்து நள்ளிரவில் வெளியேறினார்.

Tags:    

Similar News