ராகுலின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த பாஜகவுக்கு பிரியங்கா காந்தி பதிலடி
- பிரதமரின் பயணங்கள் மீது வராத விமர்சனம், ராகுல் காந்தி மீது மட்டும் வருவது ஏன்?
- ராகுலின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த பாஜகவுக்கு பிரியங்கா காந்தி பதிலடி
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ந்தேதி ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். 20-ந்தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார்.
இந்திய காங்கிரசின் அயல நடத்தும் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். வருகிற 17-ந்தேதி அவர் பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார்.
அதோடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அயலக காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இந்த பயணத்தின்போது ஜெர்மனி மந்திரிகளையும் ராகுல்காந்தி சந்திக்கிறார். அவருடன் காங்கிரசின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோவும் உடன் செல்கிறார்.
இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் ராகுல்காந்தி ஜெர்மனி பயணம் மேற்கொள்வதை பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
பாஜகவின் விமர்சனங்களுக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "பிரதமர் மோடி தனது வேலை நாட்களில் பாதியை வெளிநாட்டு பயணங்களிலேயே கழிப்பவர். பிரதமரின் பயணங்கள் மீது வராத விமர்சனம், ராகுல் காந்தி மீது மட்டும் வருவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.