இந்தியா

ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்கலாம் - உச்சநீதிமன்றம்

Published On 2025-05-14 13:30 IST   |   Update On 2025-05-14 13:30:00 IST
  • ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள் மிக குறைவாக உள்ளது
  • ஆகமம் மற்றும் ஆகமம் அல்லாத கோவில்களை 3 மாதத்தில் அடையாளம் காண உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி பல கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் ஆகமத்திற்கு எதிராக அனைத்து சாதி அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்கள் நியமிப்பதற்கோ தேர்வு செய்வதற்கோ தடை விதிக்கவேண்டும் என்று ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் உச்சநீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கோடு தமிழகத்தில் உள்ள அனைத்து கோவிலைகளிலும் அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனம் செய்யவேண்டும் என்ற வழக்கையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், "2,500க்கும் மேற்ப்பட்ட அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதனை நிரப்பும் வகையில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள் மிக குறைவாக உள்ளது என்றும் அந்த கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமனம் செய்யக்கூடாது. ஆகம விதிகளை பின்பற்றாத கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனம் செய்ய தங்களுக்கு ஆட்சபனை இல்லை என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ராமேஸ்வரம் கோயிலில் அரச்சகர், மணியம் உள்ளிட்டோரை நியமிக்கவும் ஆகமம் மற்றும் ஆகமம் அல்லாத கோவில்களை 3 மாதத்தில் அடையாளம் காணவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பின்னர் இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Tags:    

Similar News