இந்தியா

ஸ்டிக்கர் விவகாரம்.. தி.மு.க.-வை சாடிய பிரதமர் மோடி

Published On 2024-02-28 16:04 GMT   |   Update On 2024-02-28 16:04 GMT
  • ரூ. 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல்.
  • அவர்கள் இதிலும் எல்லையை கடந்துவிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைய இருக்கும் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அடிக்கல் நாட்டினார். இதுதவிர, ரூ. 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

ராக்கெட் எவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், தமிழ்நாடு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சார்பில் நாளேட்டில் கொடுக்கப்பட்ட விளம்பரம் சர்ச்சையாகி இருக்கிறது.

 


அந்த விளம்பரத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எ.வ. வேலு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் சீன ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ராக்கெட் ஒன்றின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது.

இதற்கு பிரதமர் மோடி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "தி.மு.க. எந்த பணியையும் மேற்கொள்ளாமல், அதற்கு பெயரை மட்டும் எடுத்துக் கொள்ள நினைக்கிறது. அவர்கள் நம் திட்டங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். தற்போது அவர்கள் இதிலும் எல்லையை கடந்துவிட்டனர். இஸ்ரோ ஏவுதள திட்டத்தில் அவர்கள் சீனாவின் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர்."

"விண்வெளி துறையில் இந்தியா வளர்ந்து வருவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விண்வெளி துறையில் இந்தியாவின் வெற்றியை உலகிற்கு எடுத்து சொல்ல அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் நம் விஞ்ஞானிகள் மற்றும் நம் விண்வெளி துறையையே அவமதித்து விட்டனர். அவர்களின் தவறுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டிய நேரம் தி.மு.க.-விற்கு வந்துவிட்டது," என்று தெரிவித்தார்.


முன்னதாக இஸ்ரோவின் பெருமையை கூறும் இடத்தில் சீன ஸ்டிக்கர் இடம்பெற்று இருந்ததற்கு பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்தார். 

Tags:    

Similar News