இந்தியா

காட்டு ராஜ்ஜிய ஆட்சியை ஒழிக்க பா.ஜ.வு.க்கு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் மோடி

Published On 2025-12-20 23:33 IST   |   Update On 2025-12-20 23:33:00 IST
  • மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.
  • அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். ஆனால் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.

அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது. பிரதமரின் வருகைக்காக மாநாட்டுத் திடலில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.

இந்நிலையில், மாநாட்டுத் திடலில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் காட்டு ராஜ்ஜியத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

ஊடுருவல்காரர்களை அடையாளம் காண உதவும் எஸ்.ஐ.ஆரை திரிணமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவில் உள்ளனர்.

அந்தக் கட்சி என்னையும், பா.ஜ.க.வையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும், பேசட்டும். ஆனால் மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடாது.

பின்தங்கிய, மேற்கு வங்கத்தின் தொலைதூர பகுதிகளுக்கு நவீன வசதிகளை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். இங்கு வளர்ச்சியைக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

மாநிலத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு அளியுங்கள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News