பிரதமர் மோடியை இன்று மதியம் சந்திக்கிறார் பினராயி விஜயன்
- நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் பலி.
- மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, மேப்பாடி கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பாதிப்புக்குள்ளாயின.
இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இன்னும் சிலர் மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில், பேரிடர் பாதிப்பு பகுதிகளை மத்திய நிபுணர் குழு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறது.
நிலச்சரிவால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் பிந்தைய தேவை மதிப்பீடுகள் குழு விரிவான மற்றும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து வருகிறது.
இந்த குழு சேதத்தை கணக்கிடும் போது பழைய அளவுகோல்களை பயன்படுத்தாமல், உண்மையான இழப்பை மதிப்பிட வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அந்தக் குழுவிடம் கேரள அரசு வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையில் அங்கு மறுவாழ்வுக்கு ரூ.2 ஆயிரம் கோடியும், இழப்பீடாக ரூ.1200 கோடியும் கேட்டு மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்க அவரை சந்திக்க கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று பகல் பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பார் என்று கருதப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவை எல்-3 வகை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், அதிகபட்ச உதவி அளிக்க வேண்டும் என்று பினராயி விஜயன், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.