4-வது நாளாக முடங்கியது: இரு அவைகளும் ஒத்திவைப்பு
- பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.
- மக்களவை கூடிய 6 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் பாராளுமன்றம் முடங்கியது. ஆபரேசன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பி வருகிறார்கள்.
இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியது. அப்போது பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.
இவ்விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். சில உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதியில் நின்று பதாகைகளை காட்டினர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களை இருக்கைகளுக்கு செல்லுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். விதிகளின்படி பிரச்சினைகளை எழுப்ப அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
கோஷமிடுவதும், பதாகைகளைக் காண்பிப்பதும் சபையின் கண்ணியத்திற்கு ஏற்றதல்ல. இதுபோன்ற செயல்கள் என்ன மாதிரியான செய்தியை அனுப்பும் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும் என்று சபாநாயகர் கூறினார்.
ஆனால், சபாநாயகரின் கோரிக்கையை ஏற்காததால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதையடுத்து சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மக்களவை கூடிய 6 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 4-வது நாளாக பாராளுமன்ற மக்களவை முடங்கியது.
மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சபை துணைத் தலைவர் ஹரி வன்ஷ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கிடையே மேல்-சபையிலும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஏற்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.