பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வர முயன்ற இளம் ஜோடி: ராஜஸ்தான் எல்லையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்..!
- தண்ணீர் இல்லாமல் நாக்கு வறண்டு உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம்.
- புதிதாக திருமணம் செய்து இந்தியாவில் வாழ்க்கை நடத்த முடிவு செய்து எல்லை கடந்திருக்க வாய்ப்பு.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் ஜோடி, தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சர்வதேச எல்லையில் இருந்து 11 கி.மீ. தூரத்திற்கு முன்பாக இருவருடைய உடல்களும் கிடந்துள்ளது. ஆடு, மாடு மேய்க்கும் நபர்கள் இது தொடர்பாக எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர்.
அப்போது இறந்து கிடந்தது ரவிக்குமார் (வயது 17), ஷாந்தி பாய் (வயது 15) எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் பாகிஸ்தானின் செல்போன் சிம்கார்டு வைத்துள்ளனர். இதன் மூலம் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டுபிடித்துள்ளனர்.
உடல் கிடந்த இடத்தில் வாட்டர் கேன் கிடந்துள்ளது. இதனால் தண்ணீர் முடிவடைந்து, நாக்கு வறண்டு நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். அந்த பெண் கையில் சிகப்பு, வெள்ளை வளையல்கள் கிடந்துள்ளது. திருமணம் முடிந்தவர்கள் இதுபோன்று வளையல்கள் அணிவார்கள் என்பதால், சமீபத்தில் திருமணம் ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.