இந்தியா

தங்க கடத்தல் வழக்கு தொடர்பான ஆதாரங்களை ஒப்படைத்தால் ரூ.30 கோடி பணம் தருவதாக பேரம்- ஸ்வப்னா பரபரப்பு பேட்டி

Published On 2023-03-10 05:24 GMT   |   Update On 2023-03-10 05:26 GMT
  • கேரள முதல் மந்திரி பற்றியோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ அவதூறாக எதுவும் பேசக்கூடாது.
  • பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பெண் அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரும் இந்த வழக்கில் கைதானார்.

இதையடுத்து இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. அவர் பதவி விலக கோரி போராட்டங்களும் நடத்தினர்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா அவ்வப்போது ஊடகங்கள் முன்பு பரபரப்பு தகவல்களை தெரிவித்து வந்தார். மேலும் இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதன்பின்னணியில் அரசியல் இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கூறிவந்த நிலையில் நேற்று ஸ்வப்னா முகநூலில் தோன்றி மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

கேரளாவை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களாக என்னை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என கூறினார். அவரை பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்து பேசினேன். அப்போது அவர் தங்க கடத்தல் தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் தந்து விடும்படி கேட்டார்.

அவற்றை கொடுத்தால் ரூ.30 கோடி பணம் தருவதாகவும் கூறினார். பெங்களூருவில் இருந்து அரியானாவுக்கோ அல்லது ஜெய்பூருக்கோ சென்றுவிட வேண்டும்.

மேலும் கேரள முதல் மந்திரி பற்றியோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ அவதூறாக எதுவும் பேசக்கூடாது. மீறி பேசினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

மேலும் பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News