இந்தியா

ஒடிசா ரெயில் விபத்து.. பிணவறையில் உயிருடன் எழுந்த நபரால் பரபரப்பு!

Published On 2023-06-07 01:29 GMT   |   Update On 2023-06-07 01:51 GMT
  • உயிரிழந்தோர் உடல்களை அடையாளும் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • அடையாளம் காணப்பட்ட உடல்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் 288 பேரை பலி கொண்டது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளில் ஏராளமான சிக்கல்கள் எழுந்தது. அந்த வகையில், உயிரிழந்தோர் உடல்களை அடையாளும் காணும் பணியின் போது ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள பள்ளி ஒன்றில் தான், உயிரிழந்தோர் உடல்கள் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த வெள்ளி கிழமை இரவு நடந்த கோர விபத்தில், மறுநாளான சனிக்கிழமை மாலை வரை மீட்பு பணிகள் நடைபெற்றன. பின் ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் துவங்கின. இதனிடையே உயிரிழந்தோர் உடல்களை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வந்தன.

அடையாளம் காணப்பட்ட உடல்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றும் சடலங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. பாலசோரில் உள்ள பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த உடல்களை மீட்பு படையினர் ஆய்வுக்காக எடுக்க சென்றனர். உடல்கள் வைக்கப்பட்ட அறையில், வேறு யாரும் இல்லை. இந்த நிலையில், உடலை எடுக்க வந்த மீட்பு படையினர் காலை திடீரென யாரோ பிடித்துள்ளனர்.

சடலங்கள் வைக்கப்பட்ட அறையில், விபத்தில் உயிர்பிழைத்த நபர் அடைக்கப்பட்டிருந்துள்ளார். உயிர்பிழைத்த நபர் 35 வயதான ராபின் என்று விசாரணையில் தெரியவந்தது. சடலங்கள் மட்டுமே வைக்கப்பட்ட அறையில் மீட்பு படையினர் காலை உயிர்பிழைந்தவர் பிடித்ததால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு மெல்ல விழித்து எழுந்த ராபின், நான் உயிருடன் இருக்கிறேன், சாகவில்லை. தயவு செய்து எனக்கு தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் அதிர்ந்த மீட்பு படையினர், மெல்ல உயிர்பிழைத்த நபர் அங்கிருந்து நகர முடியாமல் இருப்பதை பார்த்து அவருக்கு உதவினார். பிறகு மீட்பு படையினர் உயிர்பிழைத்த ராபினை வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவர் மேற்கு வங்க மாநிலத்தின் சர்னேகாளி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். விபத்தில் கால்களை இழந்த ராபின் உயிர்பிழைத்துள்ளார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News