எரிபொருள் பற்றாக்குறை... பரவும் தகவல்களால் பீதியடைய வேண்டாம் - இந்தியன் ஆயில் நிறுவனம்
- தவறான வதந்திகள் பரப்பப்படுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
- நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. மேலும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதனை தொடர்ந்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது. பதற்றம் வேண்டாம். நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
அனைத்து விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் மற்றும் LPG உடனடியாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.