பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு பிரதமர் மோடி வெளிநாட்டில் குடியேறுவார்- லாலுபிரசாத் யாதவ் கிண்டல் பேச்சு
- எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' என்ற புதிய கூட்டணியை பிரதமர் மோடி குற்றம் சாட்டி பேசியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
- மோடி தனக்கு பிடித்த இடத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்.
பாட்னா:
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு மீண்டும் பல்வேறு கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் நேற்று அவரது மூத்த மகனும், பீகார் மந்திரியுமான தேஜ் பிரதாப் யாதவ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவரிடம், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' என்ற புதிய கூட்டணியை பிரதமர் மோடி குற்றம் சாட்டி பேசியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து லாலுபிரசாத் கூறுகையில், மோடி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு வெளிநாட்டில் குடியேறுவார்.
அவர் தான் விலகுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார். இதுவே அவர் பல நாடுகளுக்கு செல்வதற்கு காரணம். அவர் தனக்கு பிடித்த இடத்தை தேடிக்கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
அவரது இந்த கிண்டல் பேச்சு அங்கு தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.