தேவைப்பட்டால் சிறைக்கு செல்ல தயார்: 2800 நாய்களைக் கொன்ற கர்நாடக எம்.எல்.சி.
- சிக்கமகளூரு மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- இதற்கு தகுந்த தீர்வு எடுக்க வேண்டும் என்றார் போஜே கவுடா.
பெங்களூரு:
கர்நாடக மேல்சபையில் நேற்று சிக்மகளூரு மாவட்டத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் போஜே கவுடா பேசியதாவது:
சிக்மகளூரு மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு தகுந்த தீர்வு எடுக்க வேண்டும்.
தடுப்பூசியால் ரேபிஸ் மட்டுமே தடுக்க முடியும். கடிப்பதை தடுக்க முடியாது. நான் கடிக்கும் நாய்கள் பற்றி பேசுகிறேன்.
நாய்களின் நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. முந்தைய உத்தரவை மாற்ற உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுங்கள்.
பள்ளிக் குழந்தைகள், சாதாரண மக்களை நாய்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
நான் நகராட்சி தலைவராக இருந்தபோது, 2,800 நாய்களுக்கு, இறைச்சியில் மருந்து தெளித்து கொன்றோம். பின், அவை ஒரு தென்னை மரத்தின் கீழ் புதைக்கப்பட்டன.
விலங்குகள் மீது நமக்கும் அக்கறை உண்டு, ஆனால் விலங்கு பிரியர்கள் மற்றொரு அச்சுறுத்தல்.
நீங்கள் சிறு குழந்தைகளின் துன்பங்களைப் பார்க்கிறீர்கள். இதைப் பற்றி நீங்கள் தினமும் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் படிக்கிறீர்கள். இது ஒவ்வொரு நாளும் நடக்கிறது. நம் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தேவைப்பட்டால் சிறைக்கும் செல்வோம் என தெரிவித்தார்.