கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் உத்தரவாத திட்டங்களுக்கு ஆதரவான அலை: சித்தராமையா
- மோடியின் அலை வீசவில்லை. அதற்கு அவருடைய பொய்தான் காரணம்.
- 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தபோது 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.
தென்மாநிலங்களில் கடந்த முறையை விட தற்போது அதிகமான இடங்களை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா தீவிர தேர்தல் பணி மேற்கொண்டு வருகிறது. கடந்த முறை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நான்கு தென்மாநிலங்களில் கர்காடகாவில் உள்ள 28 இடங்களில் 26 இடங்களிலும், தெலுங்கானாவில் 17 இடங்களில் நான்கிலும் வெற்றி பெற்றிருந்தது.
இந்த முறை இதை தாண்ட வேண்டுமென்றால் கர்நாடகா மாநிலத்தில் அதே 26 இடங்களை பிடிக்க வேண்டும். ஆனால், தற்போது மாநில கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி கடும் சவாலாக விளங்குகிறது. இதனால் பா.ஜனதா 26 இடங்களை கைப்பற்றுமா? என்பதில் சந்தேகம் எழுகிறது.
இதற்கிடையே மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. அது தங்களுக்கு சாதகமாக அமையும் என நினைக்கிறது.
இந்த நிலையில்தான் கர்நாடகா மாநிலத்தில் மோடி அலை வீசவில்லை, காங்கிரஸ் அரசின் உத்தரவாத திட்டங்களுக்கு சாதகமான அலை வீசுகிறது என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் "இங்கே மோடி அலை இல்லை. ஏனென்றால் அவருடைய பொய்தான் அதற்கு காரணம். அவருடைய பொய்களை மக்கள் உணர்ந்து விட்டனர். எனவே நாடு முழுவதும் பிரதமர் மோடி வீசவில்லை. எதாவது அலை வீசுகிறது என்றால் அது எங்களுடைய உத்தரவாத அலையாகும்.
2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தபோது 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. மேலும், 130 புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 2019 முதல் 2023 வரை ஆட்சியில் இருந்த பா.ஜனதா எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை" என்றார்.