இந்தியா

அதிகரிக்கும் காற்று மாசு: டெல்லியை விட்டு வெளியேறுங்கள் - பொதுமக்களுக்கு டாக்டர் அறிவுறுத்தல்

Published On 2025-11-01 10:44 IST   |   Update On 2025-11-01 10:44:00 IST
  • நச்சுக் காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பது நுரையீரலை கடுமையாக சேதப்படுத்தும்.
  • மாசுபாடு அதிக இறப்பு விகிதங்களுடன் கடுமையான வைரஸ் அல்லது பாக்டீரியா நிமோனியாவை ஏற்படுத்துகிறது.

டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் காற்றின் தரம் இன்று காலை 'மோசமான' பிரிவில் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு காலை 8 மணிக்கு 245 ஆக பதிவாகியுள்ளது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியின் பல கண்காணிப்பு நிலையங்களில் பதிவான காற்றின் தரக் குறியீடு 'மோசமாக' இருந்தது. சில இடங்களில் 'மிதமான' மற்றும் 'மிகவும் மோசமான' காற்றின் தரத்தையும் பதிவு செய்தன.

இந்த நிலையில் டெல்லி தலைநகரில் காற்று மாசுபாடு அபாயகரமான உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நுரையீரல் நிபுணர் டாக்டர் கோபி சந்த் கில்னானி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நுரையீரல் நிபுணர் டாக்டர் கோபி சந்த் கில்னானி கூறுகையில், உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடிந்தால் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுங்கள். நச்சுக் காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பது நுரையீரலை கடுமையாக சேதப்படுத்தும். நாள்பட்ட சுவாச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் ஆயுட்காலத்தை கூட குறைக்கும்.

மாசுபாடு அதிக இறப்பு விகிதங்களுடன் கடுமையான வைரஸ் அல்லது பாக்டீரியா நிமோனியாவை ஏற்படுத்துகிறது. தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது, ஏற்கனவே சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் கடினமான காலமாக இருக்கும். ஏனெனில் பெரும்பாலான மக்கள் சுவாசிக்கக் கூட சிரமப்படுகிறார்கள். நாள்பட்ட பாதிப்பில் உள்ளவர்கள் முடிந்தால் டிசம்பர் வரை தலைநகரை விட்டு வெளியேறுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News