இந்தியா

எனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் - கெஜ்ரிவால் பேச்சு.. மன நல பரிசோதனைக்கு பாஜக பரிந்துரை

Published On 2025-07-10 05:56 IST   |   Update On 2025-07-10 05:56:00 IST
  • துணைநிலை ஆளுநரின் தொடர்ச்சியான இடையூறுகளுக்கு மத்தியிலும் நாங்கள் பணியாற்றினோம்.
  • இலவச மின்சாரம், கல்வி சீர்திருத்தங்கள் அனைத்தும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் செய்யப்பட்டன.

டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஆம் ஆத்மி கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் தோற்றது.

இந்நிலையில் மொஹாலியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், ஆம் ஆத்மி தலைவர் ஜாஸ்மின் ஷா எழுதிய 'கெஜ்ரிவால் மாடல்' புத்தகத்தின் பஞ்சாபி பதிப்பை வெளியிட்டபோது ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து ஒன்றை தெரிவித்தார்.

அதாவது, "எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை, ஆனாலும் நாங்கள் செய்து காட்டினோம். ஆட்சி மற்றும் நிர்வாகத்திற்காக எனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று நான் உணர்கிறேன்.

துணைநிலை ஆளுநரின் தொடர்ச்சியான இடையூறுகளுக்கு மத்தியிலும் நாங்கள் பணியாற்றினோம். மொஹல்லா கிளினிக்குகள், இலவச மின்சாரம், கல்வி சீர்திருத்தங்கள் அனைத்தும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் செய்யப்பட்டன. நெருக்கடிக்கு மத்தியிலும் ஆட்சி செய்ததற்காக எனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்" என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்த டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, "அவர் மனநல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஊழல், குழப்பம், திறமையின்மை ஆகியவற்றிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டால் மட்டுமே அவர் பெற முடியும்.

பல ஊழல் வழக்குகளில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவருக்கு நோபல் பரிசு குறித்து பேச என்ன தகுதி உள்ளது? அவர் டெல்லியை சூறையாடிவிட்டார். மக்கள் அவரை நிராகரித்துவிட்டனர். கெஜ்ரிவால் நோபல் பரிசு பற்றி பேசினால், நீங்கள் சிரித்துக்கொண்டே கேட்க வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

Similar News