இந்தியா

விவாகரத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் குழந்தைகள் கண் முன்னே மனைவி கொலை- கணவர் வெறிச்செயல்

Published On 2025-05-20 14:58 IST   |   Update On 2025-05-20 14:58:00 IST
  • மனைவியை சந்தித்த கங்காதர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மனைவியை வற்புறுத்தினார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து கங்காதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் ஆர் மரை சேர்ந்தவர் கங்காதர். இவரது மனைவி அஞ்சலி (வயது 35). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கங்காதர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். இதனால் மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கணவன்,மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. அஞ்சலி கணவரை பிரிந்து தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். கங்காதரன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நிஜாமாபாத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற கங்காதர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.

நேற்று இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. நிஜமாபாத்தில் மனைவியை சந்தித்த கங்காதர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மனைவியை வற்புறுத்தினார்.

ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என மறுப்பு தெரிவித்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டார்.

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கங்காதர் நிஜாமாபாத் பஜாரில் கத்தியை வாங்கிக்கொண்டு மனைவியின் வீட்டிற்கு வந்தார். கங்காதர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஞ்சலியின் கழுத்தை அறுக்க முயன்றார். இதனைக் கண்ட அவரது மகள்கள் தடுத்தனர்.

இருப்பினும் கங்காதர் மகள்களின் கண்ணெதிரிலேயே மனைவியின் கழுத்தை அறுத்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அஞ்சலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகள்களின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அஞ்சலி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கங்காதரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கங்காதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News