மழை வெள்ளத்தில் மும்பை: மேலும் ரெட் அலர்ட்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- இடைவிடாது பெய்த மழையால் தானேவில் உள்ள மும்ப்ரா புறவழிச்சாலையில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.
- மக்கள் அனைவரும் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது.
இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களான தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இடைவிடாது பெய்த மழையால் தானேவில் உள்ள மும்ப்ரா புறவழிச்சாலையில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் உள்வரும் 14 விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்படாததால் வெவ்வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மழை காரணமாக பல ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மும்பையில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.