இந்தியா

டெல்லி மருத்துவமனைகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை- அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2024-12-18 14:55 IST   |   Update On 2024-12-18 14:55:00 IST
  • 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
  • சஞ்சீவனி யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை.

டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி சட்டசபையில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் வரவிருக்கும் தேர்தலில் தனது புது டெல்லி தொகுதியில் போட்டியிடுவார் என்றும், முதல்வர் அதிஷி தனது கல்காஜி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இன்று அறிவித்துள்ளது.

தேசிய தலைநகரில் தனது கட்சி ஆட்சியை தக்கவைத்தவுடன், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 'சஞ்சீவனி யோஜனா' திட்டத்தின் ஒரு பகுதியாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "இப்போது உங்களை கவனித்துக் கொள்வது எங்கள் கடமையாகும். நீங்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல கடுமையாக உழைத்துள்ளீர்கள்.

சிகிச்சைச் செலவில் உச்ச வரம்பு எதுவும் இருக்காது. இதற்கான பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும். ஆம் ஆத்மி கட்சியினர் உங்கள் வீட்டிற்கு பதிவுக்கு வருவார்கள். கார்டு தருவார்கள், பத்திரமாக வைத்துக் கொள்வார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தேர்தலுக்குப் பிறகு, இந்தக் கொள்கை அமல்படுத்தப்படும்" என்றார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டெல்லி தேர்தலுக்கான ஆயத்த கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) இந்த வாரம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்குப் பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News