இந்தியா

உள்ளாட்சி தேர்தலில் உண்மையான சிவசேனாவும், பா.ஜனதாவும் இணைந்து போட்டியிடும்- ஏக்நாத் ஷிண்டே

Published On 2022-08-16 02:29 GMT   |   Update On 2022-08-16 02:29 GMT
  • உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா அதிருப்தி அணி தனித்து செயல்பட வாய்ப்பு உள்ளது.
  • தானே மாநகராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா ஆட்சி செய்து வருகிறது.

தானே :

சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் இணைந்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றியது. ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனார். இந்தநிலையில் சிவசேனா அதிருப்தி அணியினர் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் விரைவில் மும்பை, தானே உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளுக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் சிவசேனா அதிருப்தி அணி தனித்து செயல்பட வாய்ப்பு உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தானேயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

சிவசேனா அதிருப்தி அணி தான் உண்மையான சிவசேனாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தானே உள்ளிட்ட பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜனதாவுடன், உண்மையான சிவசேனா(அதிருப்தி அணி) கூட்டணி அமைத்து போட்டியிடும்.

தானே மாநகராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா ஆட்சி செய்து வருகிறது. வாக்காளர்கள் சரியானதை நிச்சயம் தேர்வு செய்வார்கள்.

பாலாசாகேப் பால் தாக்கரே எப்போதுமே பா.ஜனதாவுடன், சிவசேனா கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பினார். சிவசேனா காங்கிரசுடன் அல்லது தேசியவாத காங்கிரசுடன் இணைவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. நாங்கள் பாலாசாகேப்பை பின்பற்ற போகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News