இந்தியா

பா.ஜ.க.வின் ஒரு அணியாக செயல்படும் தேர்தல் ஆணையம்: ராகுல் காந்தி தாக்கு

Published On 2025-07-12 04:52 IST   |   Update On 2025-07-12 04:52:00 IST
  • நாடு முழுவதும் நமது அரசியலமைப்பு சட்டம் மீது பா.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது.
  • தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் நலன்களுக்காக பணியாற்றுகிறது என தெரிவித்தார்.

புவனேஸ்வர்:

ஒடிசாவில் நேற்று நடந்த அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மகாராஷ்டிராவைப் போல பீகார் சட்டசபை தேர்தலையும் அபகரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

நாடு முழுவதும் நமது அரசியலமைப்பு சட்டம் மீது பா.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது.

இங்கு நேற்று முன்தினம் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் பீகார் தேர்தலை பா.ஜ.க. திருடுவதை தடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையம் தனது பணியை செய்யவில்லை. மாறாக பா.ஜ.க.வின் நலன்களுக்காக பணியாற்றுகிறது.

பா.ஜ.க. 5 முதல் 6 முதலாளிகளுக்காக மட்டுமே அரசை நடத்துகிறது. சாதாரண மக்களுக்காக செயல்படவில்லை.

நீர், காடு மற்றும் நிலம் பழங்குடியினருக்கானது. தொடர்ந்து அவர்களிடமே இருக்கும்.

பஞ்சாயத்துகள் (திட்டமிட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம் 1996-ஐ ஒடிசா பா.ஜ.க. அரசு அமல்படுத்தவில்லை. பழங்குடியினருக்கு வன உரிமை பட்டாக்கள் வழங்கப்படவில்லை.

பிஜு ஜனதா தள அரசைப் போலவே பா.ஜ.க. அரசும் ஒடிசாவை கொள்ளையடிக்கிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News