இந்தியா

டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு

Published On 2025-11-16 13:00 IST   |   Update On 2025-11-16 13:00:00 IST
  • உமரின் கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
  • உமர் சட்ட விரோத நிதிகள் மூலம் ரூ.20 லட்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி செங்கோட்டை யில் கடந்த 10-ந்தேதி கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்தனர். காரில் வெடிபொருட்கள் நிரப்பி தற்கொலை தாக்குதல் நடத்திய டாக்டர் உமர் முகமது பலியானார்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த உமர், அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். பரிதாபாத்தில் இருந்து 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்தது.

இதற்கிடையே உமரின் கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. டாக்டர் உமர், டெல்லியில் குண்டுவெடிப்புக்கு ஒரு நாள் முன்பு வரை அரியானாவின் நூஹ் நகரில் வாடகை அறையில் தங்கி இருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

அப்போது அவர் பல செல்போன்களைப் பயன்படுத்தி உள்ளார் என்று தெரிவித்தனர். அவரது நெருங்கிய கூட்டாளி டாக்டர் முசாம்மில் ஷகீல்லை போலீசார் பிடித்ததை அறிந்ததும் உமர் பரிதாபாத்தில் உள்ள அல்-பலாஹ் மருத்துவக் கல்லூரியை விட்டு வெளியேறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு, அல் பலாஹ் பல்கலைக் ழகத்தில் தயாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீடு பாதுகாப்பான முறையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. முழு வீடும் தரைமட்டமானதை அடுத்து, கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்ததும், டெல்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்து பார்த்து இருப்பதும் தெரியவந்தது.

டாக்டர் உமர் சட்ட விரோத நிதிகள் மூலம் ரூ.20 லட்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பல ஹவாலா வியாபாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் உமர் அரியானாவின் நூஹ் நகரில் உள்ள ஒரு சந்தையில் பணம் கொடுத்து அதிக அளவில் உரங்களை வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 9மிமீ தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கண்டு பிடிக்கப்படவில்லை.

பறிமுதல் செய்யப்பட்ட 3 தோட்டாக்களில் ஒன்று மட்டும் வெற்று ஷெல் ஆகும். இந்த 9 மிமீ தோட்டாக்கள் பொதுவாக பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகின்றன.

இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த அனைத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் ஆயுதங்களிலும் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவர்களின் தோட்டாக்கள் சரியாக இருந்தது.

எனவே குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்கள் பாதுகாப்பு படையினர், போலீசாருக்கு சொந்தமானவை அல்ல என்பது உறுதியானது. இதையடுத்து இந்த தோட்டாக்கள் யாருடையது? என்றும் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தோட்டாக்கள் எப்படி வந்தது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் மேலும் முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. குண்டு வெடிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பரிதாபாத் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பழைய டெல்லி வரை உமரின் பயணத்தின் புதிய தெளிவான படங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

டெல்லி-என்.சி.ஆரில் உள்ள பல மாவட்டங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சோதனைச் சாவடி களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் இருந்த காட்சிகள் மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News